ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மேற்கு கலிமந்தானில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணம் செய்த எட்டுப் பேரும் உயிரிழந்தனர்.
மாண்டோரின் உடல்களைத் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 17) தெரிவித்தனர்.
மெலாவி என்னும் பகுதியிலுள்ள தேயிலைத் தோட்டத்திலிருந்து வியாழக்கிழமை (ஏப்ரல் 16) காலை வானில் பறக்கத் தொடங்கிய ஐந்தாவது நிமிடம், ஏர்பஸ் H130 எனும் அந்த ஹெலிகாப்டரின் தொடர்பு திடீரென்று துண்டிக்கப்பட்டதாக இந்தோனீசியாவின் மீட்பு வாரியத் தலைவர் முஹம்மது சையாஃபி கூறினார்.
“தொடர்பு துண்டிக்கப்பட்டபோது ஹெலிகாப்டர் பறந்ததாக நம்பப்படும் இடம், அடர்ந்த காடுகளையும் செங்குத்தான மலைப்பாங்கு நிலப்பரப்பையும் கொண்ட ஒரு பகுதி,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தொடர்பு துண்டிக்கப்பட்ட இடத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் மேற்கே, ஹெலிகாப்டரின் வால் பகுதி போன்ற சிதைவுகளை மீட்புக் குழுவினர் கண்டெடுத்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

