புத்ராஜெயா: பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஜோகூர் மாநிலத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவிருக்கிறது.
இது குறித்து முடிவெடுக்க வெள்ளிக்கிழமை (ஜூன் 12), மலேசியத் தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் நெகிரி செம்பிலான் தேர்தல் தேதியும் நிர்ணயிக்கப்படும் எனத் தெரிகிறது.
தேர்தல் ஆணையத்தின் கூட்டத்திற்குப் பிறகு தலைமையகத்தில் செய்தியாளர் கூட்டம் நடைபெறும் என்று ஆணையத்தின் தலைவர் ரம்லான் ஹாருன் தெரிவித்தார்.
இதில் ஜோகூர், நெகிரி செம்பிலான் ஆகிய இரு மாநிங்களுக்கான வாக்குப் பதிவு, வேட்புமனுத் தாக்கல், பிரசாரங்களுக்கான காலகட்டம் போன்றவற்றுக்கான தேதி மற்றும் தேர்தல் ஆயத்த வேலைகள் குறித்து ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்மாதம் 1ஆம் தேதி ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, 56 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் கலைக்கப்படுவதாக அறிவித்தார். ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயிலின் ஒப்புதலைப் பெற்று சட்டமன்றம் கலைக்கப்பட்டது.
இதையடுத்து ஜூன் 4ஆம் தேதி நெகிரி செம்பிலான் முதலமைச்சர் அமினுதீன் ஹாருன் அம்மாநிலத்தின் 36 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றம் மறுநாள் கலைக்கப்படும் என அறிவித்தார். நெகிரி செம்பிலான் ஆட்சியாளரின் ஒப்புதல் பெற்றபின் சட்டமன்றம் கலைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

