பெட்டாலிங் ஜெயா: மலேசிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பெரிக்கத்தான் நேஷனல், திங்கட்கிழமை (ஜுன் 22) அவசரநிலைக் கூட்டத்தை நடத்தவிருக்கிறது.
மாநில தேர்தலுக்குப் பயன்படுத்தப்படவேண்டிய கூட்டணியின் சின்னம், பங்காளிக் கட்சிகள் உட்பட பல முக்கிய விவகாரங்கள் குறித்து அக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
திங்கட்கிழமை இரவு 8.30 மணிக்கு கோலாலம்பூரில் உள்ள பாஸ் (பார்டி இஸ்லாம் மலேசியா) கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் நடைபெறும்.
அதற்கான அறிவிப்பு பெரிக்கத்தானின் பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் கையொப்பத்துடன், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 18) தேதியிடப்பட்டு வெளியிடப்பட்டதாக த ஸ்டார் ஊடகம் செய்தி வெளியிட்டது.
பெரிக்கத்தான் கூட்டணியின் உறுப்பினர் கட்சிகள் குறித்து முடிவெடுப்பது கூட்டத்தின் முக்கியக் காரணமாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன் விவரங்களை பெரிக்கத்தான் கூட்டணியின் தகவல் பிரிவுத் தலைவர் அன்வர் முசா உறுதிப்படுத்தினார்.
மலேசிய இந்திய மக்கள் கட்சி
கூட்டணியின் எதிர்காலத் திட்டங்கள் சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) தலைவர் பி.புனிதன் கூறினார்.
சின்னங்கள், எதிர்காலத் திட்டங்கள் உட்பட, ஜோகூர், நெகிரி செம்பிலான் மாநிலங்களின் தேர்தல் அந்த பேச்சுவார்த்தைகளில் அடங்கும் என்பதையும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
மலேசிய தேசிய வலதுசாரியான பெர்சத்து கட்சி கூட்டணியில் இடம்பெறுமா என்பதும் அதில் முடிவெடுக்கப்படும் என்று பெரிக்கத்தான் தலைவர் அகமது சம்சுரி மொக்தார் கூறியதாக ஊடகச் செய்திகள் வெளிவந்துள்ளன.
“தற்போதைய நிலவரப்படி, பெரிக்கத்தான் கட்சிகள் இருந்தபடியே உள்ளன. அதேவேளை, பெர்சத்து கட்சியின் நிலை அதனைப் பொறுத்ததே,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) பகாங் மாநிலத்தில் நடந்த ஓர் சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு கூறினார்.
பாஸ் கட்சிக்கும் பெர்சத்து கட்சிக்கும் பெரிக்கத்தான் கூட்டணியின் தலைமைத்துவம் குறித்து எழுந்துள்ள கருத்து வேறுபாட்டினால் அவசரக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஜோகூரில் ஜூலை 11ஆம் தேதியும். நெகிரி செம்பிலானில் ஆகஸ்ட் 1ஆம் தேதியும் மாநிலத் தேர்தல் நடைபெறும்.
பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியில் பாஸ், பெர்சத்து, ஜெராக்கான், எம்ஐபிபி கட்சிகள் உறுப்பினர்களாக உள்ளன.

