சிட்னி: வெலிங்டனிலிருந்து சிட்னி சென்றுகொண்டிருந்த ஏர் நியூசிலாந்து விமானம் ஒன்று, எந்திரப் பிரச்சினை காரணமாக ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 1) ஆக்லாந்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக விமான நிறுவனம் கூறியுள்ளது.
எந்திரம் செயலிழக்கப்பட்டதாகவும் ஆக்லாந்துக்குத் திருப்பிவிடப்பட்ட விமானம் உள்ளூர் நேரப்படி மாலை 5.20 மணிவாக்கில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகவும் ஏர் நியூசிலாந்து விமானச் சேவைத் தலைவர் கியூ பியர்ஸ் கூறினார்.
சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
அது, ‘ஏர்பஸ் ஏ320’ ரக விமானம் என்று ஏர் நியூசிலாந்து பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
அடுத்த நிதியாண்டின் முதல் பாதிக்கான வருமான முன்னுரைப்பைக் குறைத்துள்ள ஏர் நியூசிலாந்து, தொடர் எந்திரப் பிரச்சினைகள் வருமானத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக நவம்பரில் கூறியது.