கோலாலம்பூர்: சுற்றுப்புற, சமுதாய, ஆளுமைத் திட்டம் வெறும் அறிக்கையாகவோ அல்லது நிதி பெறுவதற்கான நிபந்தனையாகவோ இருக்கக்கூடாது. அது ஒரு தேசியக் கலாசாரமாக மாற வேண்டும் என்று மலேசியத் துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்தார். கோலாலம்பூரில் நடைபெற்ற உச்சநிலை மாநாட்டில் அவர் இதனை வலியுறுத்திக் கூறினார்.
உச்சநிலை மாநாட்டை மலேசியாவின் இயற்கை வளத்துக்கான பொது நல அமைப்பும் மலேசியத் தேசியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தின.
மலேசியாவில் சுற்றுப்புற, சமுதாய, ஆளுமைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதைப் பற்றி கலந்துரையாட இந்த உச்சநிலை மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
முடிவுகள் எடுக்கும் முறை, வணிக நடைமுறைகள் மற்றும் நிறுவனங்களின் நிர்வாகம் ஆகியவற்றில் இந்த நெறிமுறை முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். சந்தை நெருக்குதலுக்காக அல்லாமல், வளமான நாட்டை உருவாக்குவதற்காக இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திரு ஃபடில்லா குறிப்பிட்டார்.
நாட்டின் போட்டித்தன்மையை உயர்த்தவும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் இந்தச் சட்டம் உதவுகிறது என்றார் அவர். 2050ஆம் ஆண்டுக்குள் கரிம வெளியேற்றம் அறவே இல்லாத நிலையை நோக்கி நாட்டை மாற்றுவதற்காகப் பல்வேறு கொள்கைகளை அரசு வகுத்துள்ளதை அவர் சுட்டினார்.
தேசிய எரிசக்தி மாற்றுத் திட்டம், புதிய தொழில்துறை முதன்மைத் திட்டம் மற்றும் பொருளியல் கட்டமைப்பு போன்ற பல திட்டங்களை அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. மேலும், நாட்டின் பெரும்பான்மையான வணிகங்களாக விளங்கும் சிறிய, நடுத்தர நிறுவனங்களும் இந்த மாற்றத்துக்கு ஏற்ப தங்களை உயர்த்திக்கொள்ள வேண்டும் என்று திரு ஃபடில்லா கேட்டுக்கொண்டார். பசுமை மாற்றத்தின் வெற்றியில் இத்தகைய நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாதது என்று அவர் தெரிவித்தார்.

