கோலாலம்பூர்: மக்கள் நலன்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் மூலம் கிளந்தான் உட்பட ஒவ்வொரு மாநிலமும் உரிய கவனத்தைப் பெறுவதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
கிளந்தான் மாநில முதலமைச்சர் முகமது நசுருதின் தாவூத், வியாழக்கிழமை (பிப்ரவரி 12) அன்று பிரதமர் அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக திரு அன்வாரைச் சந்தித்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 13) ஒரு பேஸ்புக் பதிவில் திரு அன்வார் இவ்வாறு கூறினார்.
அச்சந்திப்பின்போது விவாதிக்கப்பட்ட விஷயங்களில், மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள், குறிப்பாக கிளந்தான் மக்களுக்கு உதவுவதற்கான முயற்சிகளைத் தீவிரப்படுத்துவது ஆகியவை அடங்கும் என்று பிரதமர் கூறினார்.
“வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல், பொருளியல் வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், நியாயமான, சமநிலையான வளர்ச்சியைச் செயல்படுத்துதல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
“மக்களின் நலன்கள் மற்றும் அனைவருக்கும் மிகவும் பாதுகாப்பான எதிர்காலத்தை மையமாகக் கொண்ட கொள்கைகள், நடவடிக்கைகள் மூலம் கிளந்தான் உட்பட ஒவ்வொரு மாநிலத்திற்கும் உரிய கவனம் செலுத்தப்படுவதை மடானி அரசாங்கம் தொடர்ந்து உறுதி செய்யும்,” என்று திரு அன்வார் கூறினார்.
இதைத் தவிர, வியாழக்கிழமை மாலை பிரதமரின் அதிகாரத்துவ இல்லத்தில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பினாங்கு மாநில ஆளுநர் ரம்லி நகா தாலிப் மற்றும் அவரது மனைவி நூரா ஆஷிகின் ராஜா அப்துல்லா ஆகியோரையும் வரவேற்றதாகப் பிரதமர் ஒரு தனி பதிவில் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பு தங்களுக்கு இடையேயான நீண்டகால உறவுகளை மேலும் வலுப்படுத்தியதாகவும், பினாங்கின் வளர்ச்சியின் திசை குறித்த கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளமாகவும் செயல்பட்டதாக அவர் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
மக்களின் நல்வாழ்வையும், தேசிய பொருளியல் வளர்ச்சியின் உந்துசக்தியாக மாநிலத்தின் ஆற்றலையும் இந்த விவாதம் வலியுறுத்தியது என்று அவர் கூறினார் என பெர்னாமா செய்தி வெளியிட்டது.

