புதுடெல்லி: ஏர் இந்தியா விமானச் சேவை அதன் அனைத்து விமானிகளுக்கும் போதைப்பொருள் சோதனையை விரிவாக்கம் செய்துள்ளது.
அந்தக் கட்டாய நடவடிக்கைக்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 13) அதன் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டது. அது ஒரு மின்னஞ்சல் வழியாக ஊழியர்களுக்கென தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.
ஆகஸ்ட் 4ஆம் தேதி தாய்லாந்தின் புக்கெட் நகரிலிருந்து புதுடெல்லிக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், நடுவானில் திடீரெனக் குலுங்கியதில் பணியாளர்கள் உட்பட பயணிகள் சிலரும் காயமடைந்தனர்.
அதன்பிறகு விமானம் தரையிறங்கியதும் நடந்த சோதனையில் அன்று பணியில் இருந்த விமானிகளில் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது தெரியவந்தது.
அதன் தொடர் நடவடிக்கையாக அனைத்து ஏர் இந்தியா விமானிகளையும் கட்டாய போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தும் முடிவு அந்நிறுவனத்தால் எடுக்கப்பட்டுள்ளது.
விமானப் பயண விதிமுறைகளின்படி,சோதனையில் போதைப்பொருள் உட்பட விமானி மருத்துவக் காரணங்களுக்காக உட்கொள்ளும் மருந்துவகைகள் போன்றவையும் கண்டறியப்படும்.
இந்தியாவின் குருகிராம் விமானப் பயிற்சி நிலையம், ஏர் இந்தியா விமான அலுவலகங்கள், பயணம் முடிந்து விமானிகள் கலந்துகொள்ளும் சந்திப்புக் கூட்டங்கள், விமானிகள் தங்கியிருக்கும் இடங்கள் எனப் பல சந்தர்ப்பங்களில் அவர்கள் சோதிக்கப்படுவார்கள்.
குறைந்த கட்டணச் சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானிகளும் சோதனைகளுக்கு உட்படுவர்.
தற்போதைய விதிமுறையின்படி, ஆண்டுக்கு ஒருமுறை, விமானப் பணியாளர்களில் 10 விழுக்காட்டினர் போதைப்பொருள் போன்றவற்றுக்காகச் சோதிக்கப்படுகின்றனர்.
இது குறித்து ஏர் இந்தியா நிறுவனத்திடம் இருந்து மேல் விவரங்கள் கிடைக்கவில்லை.


