வாஷிங்டன்: அமெரிக்க பெருஞ்செல்வந்தர் எலன் மஸ்க்கின் உதவியாளர்கள், சமுதாய பாதுகாப்பு நிர்வாகத்தின் கணினி அமைப்புகளில் உள்ள மில்லியன்கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட விவரங்களை அணுகுவதற்கான தடையை மாவட்ட நீதிபதி ஒருவர் நீட்டித்துள்ளார்.
மோசடியை வேரோடு அழிப்பதற்கான தனது இலக்கை எட்டுவதற்கு, சமுதாய பாதுகாப்பு நிர்வாகத்தின் தரவை முழுவதுமாக நாடுவதற்கான தேவையை வெளிப்படுத்த மஸ்க்கின் அரசாங்கச் செயல்திறன் துறை தவறிவிட்டதாக மேரிலாண்ட் மாவட்ட நீதிபதி எலன் ஹோலாண்டர் கூறினார்.
சமுதாய பாதுகாப்பு நிர்வாகத் தரவை அரசாங்கச் செயல்திறன் துறை அணுகுவதில், நீதிபதி ஹோலாண்டர் கடந்த மாதம் தற்காலிகக் கட்டுப்பாட்டு உத்தரவைப் பிறப்பித்திருந்தார்.
நீதிபதியின் தீர்ப்பை வரவேற்ற ஜனநாயக முற்போக்குக் குழுத் தலைவரான ஸ்கை பெர்ரிமேன், “தங்களது தனிப்பட்ட, ரகசியத் தகவல்களைப் பாதுகாக்க சமுதாய பாதுகாப்பு நிர்வாகத்தைச் சார்ந்திருக்கும் மில்லியன்கணக்கானோருக்கு இது நிம்மதி தரும்,” என்றார்.

