மெக்சிகோ: ஐரோப்பாவையும் லத்தீன் அமெரிக்க நாடுகளையும் அதீத வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
மெக்சிகோவில் ஜூன் மாதத்தில் மட்டும் அதிக வெப்பத்தால் 100க்கு மேற்பட்டோர் மாண்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இத்தகைய அதீத வெப்பநிலைக்கும் பருவநிலை மாற்றத்திற்கும் உலக வெப்பமயமாதலே காரணம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மெக்சிகோவில் ஜூன் 12ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் 1,000க்கு மேற்பட்டோர் வெப்பத் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 104 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டுச் சுகாதார அமைச்சு புதன்கிழமை வெளியிட்ட புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கெனவே ஏப்ரல் 14ஆம் தேதியிலிருந்து மே 31ஆம் தேதிக்குள் எட்டுப் பேர் இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர்களையும் சேர்த்து அதீத வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 112 ஆனது.
இந்த உயிரிழப்புகளுக்கு வெப்பத் தாக்கத்தால் ஏற்படும் நீரிழப்பே முக்கிய காரணம் எனக் கூறப்பட்டது.
மெக்சிகோவில் கோடை கால வெப்பநிலை சராசரியாக 30 டிகிரி செல்சியசிலிருந்து 45 டிகிரி செல்சியசிஸ் வரை பதிவாகும். ஆனால் இந்த வாரம் வடமேற்கு மாநிலமான சோனோராவில் ஆக அதிகமாக 49 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
ஜூலை 1ஆம் தேதி முதல் மற்றொரு வெப்ப அலை தாக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.