கோலாலம்பூர்: எஃப்1 கார் பந்தயம் வரும் அக்டோபர் மாதத்தில் மலேசியாவின் செப்பாங் அனைத்துலக கார் பந்தயத் தடத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது.
இதையொட்டி, இணையத்தில் பழைய நினைவுகளைப் பகிரும் கொண்டாட்டங்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டன. அக்டோபர் 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை மலேசியாவில் எஃப்1 பந்தயம் நடைபெறும் என்பதை அதிகாரபூர்வ அமைப்புகள் உறுதிசெய்தன.
இதனைத் தொடர்ந்து, மெர்சிடிஸ், ஃபெராரி, ரெட் புல், ஆவ்டி போன்ற பிரபல அணிகள் சிறப்புப் படங்களையும் காணொளிகளையும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றன.
செப்பாங் கார் பந்தயத் தடம் 1999ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை 19 முறை எஃப்1 பந்தயங்களை நடத்தியுள்ளது. 5.543 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்தத் தடம், வேகமான வளைவுகளுக்கும் கணிக்க முடியாத வெப்பமண்டல வானிலைக்கும் பெயர் பெற்றது.
2016ஆம் ஆண்டில் லூயிஸ் ஹேமில்டனின் காரில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் பந்தயத்திலிருந்து வெளியேறினார். 2009ஆம் ஆண்டில் கனமழையால் போட்டி நிறுத்தப்பட்டபோது கிமி ரைக்கோனன் பனிக்கூழ் சாப்பிட்டது போன்ற சுவாரசியமான நினைவுகள் மீண்டும் நினைவுகூரப்படுகின்றன.
இங்கு நான்கு முறை வென்ற செபாஸ்டியன் வெட்டல், அதிவேகச் சுற்று சாதனையைத் தம்வசம் வைத்துள்ளார். செப்பாங்கில் எஃப்1 கார் பந்தயம் மீண்டும் நடைபெறுவது குறித்து இளம் ஓட்டுநர்களும் ரசிகர்களும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

