மலேசியாவில் மாதிரி துப்பாக்கிகளால் ஆபத்து

2 mins read
9bdaff4f-2bea-49e6-8c46-3fd07c4ea9f7
மாதிரிப் படம்: - னபிக்சாபே

கோலாலம்பூர்: மலேசியாவில் சில குற்றவாளிகள் மாதிரி துப்பாக்கிகளைக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஜெல்-பிளாஸ்டர்ஸ் (gel-blasters) என்றழைக்கப்படும் மாதிரி துப்பாக்கிகளைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் மலேசிய காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

ஜெல்-பிளாஸ்டர் துப்பாக்கிகள், விளையாட்டுத் துப்பாக்கிகளாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்கப்படுகின்றன. பார்ப்பதற்கு உண்மையான துப்பாக்கிகளைப் போலவே இருக்கும் அவற்றை மின்வர்த்தகத் தளங்கள், டிக்டாக் போன்ற சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் வாங்க முடியும். ஒரு ஜெல்-பிளாஸ்டரின் விலை 150 ரிங்கிட்டிலிருந்து (45 வெள்ளி) தொடங்கும்.

மலேசியாவில் கடந்த 2023ஆம் ஆண்டில் அத்தகைய மாதிரி துப்பாக்கிகளைப் பயன்படுத்தி 148 குற்றச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை கொள்ளைச் சம்பவங்கள் என்று அந்நாட்டின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் திங்கட்கிழமையன்று (டிசம்பர் 23) தெரிவித்தது.

அத்தகைய குற்றச் செயல்கள் இவ்வாண்டும் தொடர்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து நவம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்தில் அத்தகைய 36 குற்றச் செயல்கள் பதிவாயின.

மலேசிய காவல்துறையினர் இப்பிரச்சினையைத் தீவிரமாகக் கையாண்டு வருகின்றனர். மாதிரி துப்பாக்கிகள் விற்கப்படுவதைக் கட்டுப்படுத்துவதில் அதிகாரிகள் கவனம் செலுத்தி வருவதாக காவல்துறை தலைமை ஆய்வாளர் ராஸாருதின் ஹுசைன் கூறினார் என்று நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டது.

கடந்த சனிக்கிழமையன்று (டிசம்பர் 21) மாதிரி துப்பாக்கிகள் விற்கும் கும்பலைக் காவல்துறை முறியடித்தது. அந்நடவடிக்கையில் 600க்கும் அதிகமான மாதிரி ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

“அத்தகைய சம்பவங்கள் (இவ்வாண்டு) குறைந்துள்ளதை நாங்கள் அறிவோம். அதேவேளை, இத்தகைய பொம்மை, மாதிரி ஆயுதங்கள் விற்கப்படுவது எங்கள் கவனத்தை ஈர்த்துள்ளது,” என்று திரு ராஸாருதின் நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்