ஷா அலாம்: மலேசியாவில் அடையாள அட்டைகள், பிறப்புச் சான்றிதழ்களைப் பெற தேசியப் பதிவுப் பிரிவிடம் (NRD) போலி விண்ணப்ப ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகச் சந்தேகிக்கப்படும் 14 பேர் ஐந்து நாள்களுக்குத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அந்த 14 பேரில் மூவர் பெண்கள் என்று தி ஸ்டார் ஊடகம் தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்கள் அனைவரும் 28லிருந்து 49 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களைத் தடுப்புக்காவலில் வைப்பதற்கான ஆணையை நீதிபதி அமீரா மஸ்துரா காமிஸ் பிறப்பித்தார். தடுப்புக்காவல் ஆணையைப் பிறப்பிப்பதற்காக மலேசிய ஊழல் தடுப்புப் பிரிவு விண்ணப்பித்ததைத் தொடர்ந்து அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சந்தேக நபர்கள், போலி ஆவணங்களைக் கொண்டு தேசியப் பதிவுப் பிரிவிடமிருந்து அடையாள அட்டைகளையும் பிறப்புச் சான்றிதழ்களையும் பெற போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது என்று தகவல் தெரிந்த ஒருவர் குறிப்பிட்டார். அவர்கள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) பிற்பகல் 12.30 மணிக்கும் மாலை 6.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சிலாங்கூர் தேசியப் பதிவுப் பிரிவு அலுவலகத்தில் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்துக் கேட்கத் தொடர்புகொண்டபோது சிலாங்கூருக்கான ஊழல் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஹைருஸாம் முகமது அமின்@ஹமிம் சந்தேக நபர்கள் கைதானதை உறுதிப்படுத்தினார்.

