வாஷிங்டன்: பிணைக்கைதிகளாகியுள்ளோரின் உறவினர்கள், அவர்களை மீட்டுக் கொண்டுவருமாறு இஸ்ரேலிடம் வலியுறுத்துகின்றனர்.
கையெறி குண்டினால் கையை இழந்த நிலையில் ஹமாஸ் போராளிகளால் பிணைக்கைதியாக பிடிக்கப்பட்ட கோல்டுபர்க் பொலின், 23, உயிருடன் இருக்கிறாரா, காஸாவின் இடிபாடுகளுக்கு இடையே மறைத்துவைக்கப்பட்டிருக்கிறாரா என்று 40 நாள்கள் கடந்தும் அவரது பெற்றோருக்கு இதுவரை தெரியாது.
அவரைப்போன்றே, காஸாவில் பிணைக்கைதிகளான 240 பேரின் நிலைமையைப் பற்றியும் எந்த விவரமும் இதுவரை கிடைக்கவில்லை.
வெளியுலகுடன் தொடர்பில்லாத அவர்கள் உயிருடன் இருக்கின்றனரா, உணவு, மருந்து போன்ற அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்படுகிறதா போன்ற எதற்கும் ஆதாரமில்லை. ஒன்றும் தெரியாமல் இருப்பதுதான் அவர்களின் குடும்பங்களுக்கு தாங்கமுடியாத வேதனையைத் தருகிறது.
எந்த விவரமும் கிடைக்காத உறவினர்களுக்கு இவ்வேளையில் சில பெண்களும் குழந்தைகளும் விடுவிக்கப்படலாம் என்ற செய்திகள் வருவது பதற்றத்தை உருவாக்கிவிட்டது.
பொதுவில் யாருக்கும் தெரியாமல் பேச்சுவார்த்தைகள் நடந்துவந்தாலும் மிகவும் ரகசியமாகவே யார் விடுதலை ஆகலாம் என்பதைப்பற்றி இஸ்ரேலிய, அமெரிக்க அரசாங்கங்கள் நடந்துகொள்வதாக உறவினர்கள் கூறுகின்றனர்.
பேச்சுவார்த்தைகள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடிய நிலையில் இருப்பதால் எதையும் விவரிக்க முடியாது என்று பொதுவிலும் தனிப்பட்ட முறையிலும் அதிகாரிகள் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
ஆறு வாரங்களுக்கு மேலாக எவ்வித விவரமும் தர முடியாத செஞ்சிலுவைச் சங்கம் போன்ற உதவி அமைப்புகள் மீதுகூட உறவினர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். உதவி அமைப்பின் ஊழியர்கள் பிணைக்கைதிகளை பார்வையிட ஹமாஸ் போராளிகள், அனுமதி மறுத்துள்ளனர்.

