கோலாலம்பூர்: மலேசியாவில் 11 ஆண்டுகளைக் கழித்த பின்னர் சீனா திரும்பிய இரண்டு பாண்டா கரடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை காலை உணர்வு தழும்பிய பிரியாவிடை அளிக்கப்பட்டது.
ஃபூ வா, ஃபெங் யி எனப்படும் அந்த இரு கரடிகளும் காலை 7.15 மணியளவில் சிலாங்கூரில் உள்ள தேசிய வனவிலங்குப் பூங்காவில் இருந்து வாகனங்களில் ஏற்றப்பட்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
அங்கு, அந்தக் கரடிகளைப் பார்க்க ரசிகர்கள் பலர் திரண்டனர். கிட்டத்தட்ட 40 பேர் அந்தக் கரடிகளை நோக்கிக் கையசைத்து பிரியாவிடை அளித்தனர். அவர்களில் சிலர் காணொளிப் படங்களையும் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர்.
அவர்களில் ஒருவரான சின் லீ பெங், 56 எனப்படும் மாது தமது ஏழு நண்பர்களுடன் காலை 5 மணிக்கெல்லாம் வனவிலங்குப் பூங்காவுக்கு வந்துவிட்டார். பின்னர் விமான நிலையம் வரை அவற்றைப் பின்தொடர்ந்து சென்றார். கரடிகளைப் பிரிவது தமக்குக் கவலையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
வலுவான அரசதந்திர உறவுள்ள நாடுகளுடனான நன்மதிப்பைப் பிரதிபலிக்கும் விதமாக கரடி இரவல் திட்டத்தை சீனா செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு மலேசியாவுக்கு அந்த இரண்டு கரடிகளும் அனுப்பி வைக்கப்பட்டன.
சீனா-மலேசியா இடையிலான 40 ஆண்டு அரசதந்திர உறவைக் கொண்டாடும் விதமாக அந்தக் கரடி இரவல் திட்டம் அமைந்தது.
அந்த கரடி இணைக்குப் பிறந்த மூன்று குட்டிகள் ஏற்கெனவே சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.