பால்ட்டிமோர்: அமெரிக்காவின் மத்தியப் புலனாய்வுப் பிரிவு (எஃப்பிஐ) அதிகாரிகள் செப்டம்பர் 21ஆம் தேதியன்று பால்ட்டிமோரில் உள்ள சிங்கப்பூர் கப்பலில் ஏறி சட்ட அமலாக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
‘மெர்ஸ்க் சல்டோரோ’ எனும் பெயர் கொண்ட அந்தக் கப்பலில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த மார்ச் மாதம் பால்ட்டிமோரில் உள்ள ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது மோதி அது இடிந்து விழக் காரணமாக இருந்த சிங்கப்பூர் சரக்குக் கப்பலான ‘டாலி’யை நிர்வகிக்கும் அதே நிறுவனம் ‘மெர்ஸ்க் சல்டோரோ’வையும் நிர்வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘டாலி’ கப்பலையும் ‘மெர்ஸ்க் சல்டோரோ’ கப்பலையும் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட சினர்ஜி மரின் குழுமம் நிர்வகிக்கிறது.
கவனக்குறைவுடன் நடந்துகொண்டு ஃபிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் மீது மோதி அது இடிந்து விழக் காரணமாக இருந்ததற்காக ‘டாலி’ கப்பலின் உரிமையாளர் மீதும் அதைச் செலுத்தியவர் மீதும் அமெரிக்க நீதித்துறை அண்மையில் வழக்கு தொடுத்தது.
‘டாலி’ கப்பல் சிங்கப்பூரை மையமாகக் கொண்ட கிரேஸ் ஓஷன் லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமானது.
அந்த நிறுவனத்திடமிருந்து அமெரிக்க அரசாங்கம் 100 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோருகிறது.