ஜகார்த்தா: இந்தோனீசியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலிக்குச் சென்றுகொண்டிருந்த பயணப் படகு மூழ்கியதில் குறைந்தது நால்வர் உயிரிழந்தனர், பலரைக் காணவில்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆகக் கடைசி நிலவரப்படி 31 பேர் நீருக்குள்ளிருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்; 30 பேரை இன்னும் காணவில்லை.
65 பயணிகளைக் கொண்டிருந்த அப்படகு புதன்கிழமை (ஜூலை 2) நள்ளிரவுக்கு சற்று நேரத்துக்கு முன்பு மூழ்கியது. ஜாவா மாநிலத்திலிருந்து அப்படகு பாலித் தீவுக்குச் சென்றுகொண்டிருந்தது.
முன்னதாக நால்வர் மீட்கப்பட்டதாகவும் 61 பேரைக் காணவில்லை என்றும் செய்தி வெளியானது.
சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த இந்தோனீசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார் என்று அமைச்சரவைச் செயலாளர் டெடி இந்திரா விஜாயா வியாழக்கிழமை (ஜுலை 3) அறிக்கையில் தெரிவித்தார். மோசமான வானிலை காரணமாக விபத்து நேர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
படகில் இருந்தோரில் 53 பேர் பயணிகள் என்றும் 12 பேர் ஊழியர்கள் என்றும் சுரபாயா தேடல், மீட்பு அமைப்பு தெரிவித்தது. தேடல் பணிகளில் கைகொடுக்க சுரபாயாவிலிருந்து ஒரு மீட்புக் குழுவும் காற்றால் அடைக்கப்படக்கூடிய மீட்புப் படகுகளும் அனுப்பப்பட்டன.
ஆகக் கடைசி நிலவரப்படி உயிர் பிழைத்த நால்வர், மூழ்கிய படகில் இருந்த உயிர்காப்புப் படகைக் கொண்டு தங்களைக் காப்பாற்றிக்கொண்டனர். அவர்கள் வியாழக்கிழமை அதிகாலை நீரில் காணப்பட்டனர் என்று சுரபாயா தேடல், மீட்பு அமைப்பு தெரிவித்தது.
மூழ்கிய படகில் 22 வாகனங்கள், 14 லாரிகள் ஆகியவற்றையும் ஏற்றிச் சென்றதாக அமைப்பு குறிப்பிட்டது.
தொடர்புடைய செய்திகள்
படகு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டதற்கும் கூடுதலானோர் அதில் இருந்தனரா என்பதைத் தெரிந்கொள்ளும் முயற்சிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தோனீசியாவில் அவ்வாறு நிகழ்வது அடிக்கடி நடக்கும் ஒன்றாகும்.
படகில் வெளிநாட்டவர் இருந்தனரா என்பது தெரியவில்லை.