கோலாலம்பூர்: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல், சீனாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக மலேசியாவில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
உலகின் முன்னணி செம்பனை எண்ணெய் ஏற்றுமதியாளரான மலேசியா, உர விநியோகத்தை உறுதிப்படுத்த புதிய விநியோக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தோட்டத் தொழில்கள், மூலப்பொருள் அமைச்சர் நோரைனி அகமது தெரிவித்துள்ளார்.
அடுத்த மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் மாற்று விநியோக வழிகள் கண்டறியப்படும் என்றும், விலையைச் சீராக வைத்திருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வியாழக்கிழமை (மார்ச் 26) வெளியிடப்பட்ட அறிக்கையில் அவர் குறிப்பிட்டார்.
தற்போது உரம் தயாரிக்கத் தேவையான மூலப்பொருள்களின் விலை அதிகரித்துள்ளதால், பல உள்நாட்டு நிறுவனங்கள் புதிய தருவிப்பு ஆணைகளைப் பெறுவதை நிறுத்தி வைத்துள்ளன. குறிப்பாக, சீனாவிலிருந்து யூரியா உரம் வருவது குறைந்ததால் அதன் விலை 50% வரை உயர்ந்துள்ளது, இது நெல் விவசாயிகளைப் பெரிதும் பாதித்துள்ளது.
மலேசியா ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 4 முதல் 5 மில்லியன் டன் உரங்களை இறக்குமதி செய்கிறது. இதன் சந்தை மதிப்பு 5 பில்லியன் ரிங்கிட் ஆகும்.
ஒற்றை மூலப்பொருள் ஆதாரத்தைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்கவும், உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்யவும் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

