சான் ஃபிரான்சிஸ்கோ: கலிஃபோர்னியாவில் ஓட்டுநர் இல்லா கார்களுக்கு அபராதம் விதிப்பது குறித்தும் அவற்றின் உரிமங்களை ரத்து செய்வது குறித்தும் அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.
கலிஃபோர்னியாவில் விதிமுறைகளை மீறும் ‘வேமோ’ ரோபோ டாக்சிகள் போன்ற ஓட்டுநர் இல்லா கார்களுக்கு அபராதம் விதிக்கவும் அவசரக் காலங்களில் அவற்றை அகற்ற தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிடவும் அதிகாரிகள் விரைவில் அதிகாரம் பெறவிருக்கின்றனர்.
புதிய தொழில்நுட்பங்களை ஒழுங்குபடுத்தும் 2024ஆம் ஆண்டின் சட்டத்தின்படி தானியக்க வாகனங்களுக்குப் புதிய விதிகளை அமல்படுத்த வாகனத் துறை இவ்வாரம் ஒப்புதல் அளித்தது.
இந்தப்புதிய விதிமுறைகள் ஜூலை 1ஆம் தேதி அமலுக்கு வருகின்றன.
உள்ளூர் அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஓட்டுநர் இல்லா கார்கள் தொந்தரவுகளை விளைவித்த சவால்களை சமாளிக்கவும் புதிய விதிமுறைகள் செயல்படுத்தப்படுகின்றன.
கடந்த மாதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டபோது ‘வேமோ’ டாக்சிகள் சாலைகளையும் சந்திப்புகளையும் வழிமறித்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த மாதம் டெக்சசின் ஆஸ்டின் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்த இடத்திற்கு அவசரமாகச் சென்ற மருத்துவ வாகனத்தை ‘வேமோ’ டாக்சி ஒன்று வழிமறித்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில், கூகலின் ‘ஆல்ஃபாபெட்’ நிறுவனம், தனது ‘வேமோ’ டாக்சிகள் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்படவும் எச்சரிக்கையொலி வந்தால் பாதையிலிருந்து விலகிச் செல்லவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது.

