பெந்தோங், மலேசியா: கெந்திங் ஹைலண்ட்ஸ் கேளிக்கைப் பூங்காவில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) மாலை தீ மூண்டது.
தீ அணைக்கப்பட்டு விட்டது என்றும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என்றும் பாகாங் தீயணைப்பு, மீட்புத் துறை துணை இயக்குநர் அப்துல் கனி தெரிவித்தார்.
நான்கு தளங்கள் கொண்ட ஸ்கைஅவென்யூ கடைத்தொகுதியில் மாலை 4.30 மணியளவில் தீ மூண்டதாக கெந்திங் மலேசியாவுக்கான பேச்சாளர் ஒருவர் கூறினார். மாலை 5 மணிக்கு தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்துக்குச் சென்றனர்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட புகைப்படங்களும் காணொளிகளும், கட்டடத்தின் குறைந்தது ஒரு பக்கத்தில் கரும்புகையும் தீயும் சூழ்ந்திருந்ததைக் காட்டின.
கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் தொடங்கிய தீ, நான்காவது தளத்திற்குப் பரவியதாக பாகாங் தீயணைப்புத் துறையின் குறிப்பை மேற்கோள்காட்டி மலாய்மெயில் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
ரிசார்ட்ஸ் வோர்ல்ட் கெந்திங்கின் மற்ற பகுதிகள் பாதிக்கப்படவில்லை என்று நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார்.
“ஆபத்திலிருந்து காக்க பொதுமக்கள் உடனடியாக கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டனர்,” என்று கெந்திங் மலேசியா வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்தது.

