ஹனோய்: வியட்னாமில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அம்சங்களைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கான புதிய சட்டம் நடப்புக்கு வந்துள்ளது.
தென்கிழக்காசிய வட்டாரத்தில் செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் சட்டம் நடப்புக்கு வந்துள்ள முதல் நாடு வியட்னாமாகும்.
இந்த ஏஐ சட்டத்துக்கு வியட்னாம் நாடாளுமன்றத்தில் சென்ற ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜெனரேட்டிவ் ஏஐ எனப்படும் ஆக்கத்திறன் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கையாள்வது இந்தச் சட்டத்தின் இலக்காகும்.
இது, ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கை நுண்ணறிவுச் சட்டத்தைப் போன்றது.
சாட்போட் எனப்படும் ‘பேசும்’ செயற்கை நுண்ணறிவுத் தளங்கள், படங்களை ‘உருவாக்கும்’ செயற்கை நுண்ணறிவுத் தளங்கள் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் கையாளப் பல நாடுகள் முயற்சி எடுத்து வருகின்றன. பொய்த் தகவல், இணையத் துன்புறுத்தல், பதிப்புரிமை விதிமீறல் போன்ற விவகாரங்களில் அபாயங்களைக் கையாள்வது நோக்கமாகும்.
எனினும், ஒருசில நாடுகள் மட்டுமே இதன் தொடர்பில் சட்டம் வரைந்து அமல்படுத்தியுள்ளன.
வியட்னாமில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 1) இச்சட்டம் நடப்புக்கு வந்தது. இச்சட்டம், மின்னிலக்க உலகில் அவரவர் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளையில் அனைத்துலகத் தரநிலைகளையும் உள்ளடக்க வியட்னாமுக்கு வகைசெய்யும் என்று அந்நாட்டு அரசாங்கம் டிசம்பரில் குறிப்பிட்டது.

