கொழும்பு: இலங்கைத் தலைநகர் கொழும்பில் உள்ள இந்திய விசா மையத்தில் அண்மையில் நிகழ்ந்த திருட்டுத் தொடர்பில் சந்தேகப் பேர்வழிகள் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அந்த ஐவரில், அங்கு துப்புரவாளராகப் பணிபுரியும் பெண் ஒருவரும் அடங்குவார் என்று டெய்லி மெயில் செய்தி தெரிவிக்கிறது.
பாதுகாப்புக் காரணங்களுக்காக கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் கடந்த 15ஆம் தேதியிலிருந்து சில நாள்களுக்கு மூடப்பட்டு, இவ்வாரம் திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்பட்டது.
இதனிடையே, இம்மாதம் 14ஆம் தேதி கொள்ளையர்கள் சிலர், அம்மையத்திற்குள் புகுந்து பல கருவிகளைக் களவாடிச் சென்றுவிட்டதாகக் காவல்துறை பேச்சாளர் நிகால் தல்துவ தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, விசாரணையை முடுக்கிய காவல்துறையினர், சந்தேகப் பேர்வழிகள் ஐவரைக் கைதுசெய்தனர். அம்மையத்தில் பணியாற்றிய 63 வயது பெண் துப்புரவாளரே அத்திருட்டுக் கும்பலுக்குத் தகவல் கொடுத்திருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
அக்கும்பலிடம் இருந்து ஒரு மடிக்கணினி, ஒரு காணொளிக் கருவி, ஒரு புகைப்படக் கருவி, ஒரு ஐபாட் ஆகியவை மீட்கப்பட்டன.

