பமாக்கோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் இந்திய நாட்டவர்கள் ஐவரைத் துப்பாக்கிக்காரர்கள் கடத்தியுள்ளதாக அவர்கள் வேலை செய்யும் நிறுவனம் ஒன்றும் இதுகுறித்த விவரமறிந்த பாதுகாப்புத் தரப்பும் தெரிவித்துள்ளன.
மேற்கு மாலியில் கோப்ரி எனும் பகுதி அருகே அந்த ஊழியர்கள் வியாழக்கிழமை (நவம்பர் 6) கடத்தப்பட்டதாக ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பாதுகாப்புத் தரப்பு கூறியது. மின்னிணைப்புத் திட்டங்களில் ஈடுபடும் நிறுவனத்தில் அவர்கள் பணிபுரிவதாக அது சொன்னது.
அந்த நிறுவனத்துக்காக வேலை செய்யும் மற்ற இந்தியர்கள், தலைநகர் பமாக்கோவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
இந்தக் கடத்தல் சம்பவத்துக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
தற்போது ஒரு ராணுவ ஆட்சிக் குழுவால் ஆட்சி செய்யப்படும் மாலி, குற்றக் கும்பல்களால் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழலைக் கட்டுப்படுத்தப் போராடி வருகிறது.

