தோக்கியோ: ஜப்பான் தலைநகரான தோக்கியோவில் வெப்பம் கடுமையாக உள்ளது. நகரின் பல இடங்களில் வெப்ப அலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வெப்பத்தைச் சமாளிக்கும் ஆடைகளை அணிந்து வர ஊக்குவிக்க வேண்டும் என்று தோக்கியோ அரசாங்கம் கேட்டுக்கொண்டது. அதாவது ஊழியர்கள் ‘டீ-ஷர்ட்’, ‘ஷார்ட்ஸ்’ வகை ஆடைகளை அணிந்து வேலைக்குச் செல்லலாம்.
ஏற்கெனவே தோக்கியோவின் அரசாங்க ஊழியர்கள் ‘டீ-ஷர்ட்’, ‘ஷார்ட்ஸ்’ வகை ஆடைகளை அணிந்து வேலைக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர்.
அதேபோல், நிறுவனங்கள் வேலை நேரங்களை அதிகாலைக்கு மாற்றவும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் அரசாங்கம் சில பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அலுவலக ஊழியர்கள் இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்றவாறு ஆடையை அணிய வேண்டும் என்றும் தோக்கியோ அரசாங்கம் நினைவூட்டியது.
“ஊழியர்கள் ‘டீ-ஷர்ட்’, ‘ஷார்ட்ஸ்’ வகை ஆடைகளை அணிந்தால் வேலையிடங்களில் குளிர்சாதனத்தைப் பயன்படுத்தும் போக்கு குறையும். அதன்மூலம் எரிசக்தி மிச்சமாகும்,” என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் தொடர்வதால் எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகள் பல எரிசக்தியைச் சிக்கனமாகப் பயன்படுத்தி வருகின்றன.

