டொரோன்டோ: குழந்தை ஒன்று இருக்கைவாரை அணிய மறுத்ததால் விமானப் பயணமே ரத்து செய்யப்பட்ட சம்பவம் கனடாவில் நிகழ்ந்தது.
ஆகஸ்ட் 6-ஆம் தேதி விக்டோரியாவிலிருந்து டொரோன்டோ நோக்கிப் புறப்படத் தயாராக இருந்த ‘போர்ட்டர் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
இருக்கையில் நின்றபடி இருந்த அக்குழந்தை இருக்கைவாரை அணிய முடியாது என அடம்பிடித்தது. குழந்தைக்கு இருக்கைவாரை அணிவிக்க அதன் பெற்றோரும் ஊழியரும் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போனது.
இதையடுத்து, பாதுகாப்பற்ற நிலையில் விமானத்தை இயக்க முடியாது என்பதால், விமானி விமானத்தை மீண்டும் முனையத்திற்கே கொண்டுசென்று, பயணிகள் இருவரை இறக்கிவிட்டார்.
இதனால் தாமதம் ஏற்பட்ட நிலையில், நள்ளிரவுக்குள் விமான ஓடுதளமும் மூடப்பட்டதால், பயணம் ரத்து செய்யப்பட்டு பயணிகள் அனைவரும் மறுநாளுக்குப் பதிவுசெய்யப்பட்டனர்.
திடீர்க் காற்று போன்ற சூழல்களின்போது பயணிகள் மீது குழந்தைகள் தூக்கி வீசப்படும் ஆபத்து உள்ளதால், மற்றப் பயணிகளின் பாதுகாப்பைக் கருதியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்துப் பாதுகாப்பு வல்லுநர் லியா துசோ தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் பெற்றோரின் கண்டிப்பின்மையை விமர்சித்த நிலையில், குழந்தைகள் அச்சம் காரணமாகவே இவ்வாறு நடந்துகொள்வதாக வேறு சிலர் கூறியுள்ளனர்.


