டாக்கா: பங்ளாதேஷின் அடுத்த பிரதமர் தாரிக் ரஹ்மான், நாட்டின் பொருளியல், சட்டம், ஒழுங்கு, நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் அவரது பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி அபார வெற்றிபெற்றதை அடுத்து திரு ரஹ்மான் நாட்டு மக்களிடம் முதல்முறையாக உரையாற்றினார்.
“நமக்குப் பல்வேறு முக்கிய சவால்கள் உண்டு. நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும். நல்ல அரசாங்கத்தை நிலைநாட்டவேண்டும்,” என்றார் திரு ரஹ்மான்.
கிட்டத்தட்ட இருபது ஆண்டுகள் கழித்து திரு ரஹ்மானின் பங்ளாதேஷ் தேசியவாதக் கட்சி மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வென்று மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியது.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு எதிராக 2024ஆம் ஆண்டு மூண்ட கலகத்தை அடுத்து பங்ளாதேஷின் நிலை சீர்குலைந்தது.
இதற்கிடையே நாட்டின் நிர்வாகத்துக்குப் பொறுப்பேற்கவிருக்கும் திரு ரஹ்மான், அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்கும்படி வர்த்தகங்களை ஊக்குவிக்கப்போவதாகக் கூறினார்.
சீனா மேம்பாட்டில் ஒரு முக்கிய நட்பு நாடாக இருந்தது என்ற அவர், பிற நாடுகள் பங்ளாதேஷுடன் இணைந்து செயலாற்றத் தயாராக இருக்கும் என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
நொபெல் தகுதி பெற்ற முகமது யூனுசின்கீழ் செயல்பட்ட இடைக்கால அரசாங்கம் வெற்றிபெற்ற திரு ரஹ்மானுக்கும் அவரது கட்சிக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டது. அந்த வெற்றி நாட்டின் ஜனநாயக உருமாற்றத்தில் ஒரு மைல்கல் என்று திரு யூனுஸ் வர்ணித்தார்.
தொடர்புடைய செய்திகள்
60 வயது திரு ரஹ்மான், முன்னாள் பிரதமர் கலிதா ஜியா, முன்னாள் அதிபர் ஜியாவுர் ரஹ்மான் ஆகியோரின் மகன்.
திரு ரஹ்மானின் அரசியல் எதிரிகள் ஊழல் தொடர்பில் அவரை அதிகம் குறைகூறினர். பங்ளாதேஷிலிருந்து சென்று லண்டனில் கிட்டத்தட்ட 17 ஆண்டுகளைக் கழித்த திரு ரஹ்மான் கடந்த ஆண்டு தமது தாயின் மரணத்துக்குச் சிறிது காலம்முன் தாய்நாடு திரும்பினார்.

