கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்மீது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) தலைநகர் கோலாலம்பூரில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், இஸ்மாயில் சப்ரி சொத்துகளைத் தெரியப்படுத்துவதன் தொடர்பிலான நீதிமன்ற அமர்வு இப்போது ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அமர்வு ஒத்திவைக்கப்பட்டது.
இதனால் பிரதமர் அன்வார் மேற்கொண்டுவரும் சிர்திருத்த முயற்சிகள் குறித்து மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.
இஸ்மாயில் சப்ரி மலேசியாவின் தேசிய இதயக் கழகத்தில் சேர்க்கப்பட்டார் என்று முன்னதாகத் தெரிவிக்கப்பட்டது. அவரின் வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் அதைத் தெரிவித்தார். உடல்நிலை சீரானவுடன் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து வாதிட இஸ்மாயில் சப்ரி உறுதியுடன் இருப்பதாகவும் வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
இஸ்மாயில் சப்ரிமீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவிருந்ததை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலையிலிருந்து செய்தியாளர்களும் ஊடகத் துறையினரும் சம்பந்தப்பட்ட கோலாலம்பூர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடத் தொடங்கினர். தேசிய இதயக் கழகத்திற்கு வெளியிலும் பலர் கூடினர்.
சொத்து விவரங்கள் குறித்து மலேசியாவின் ஊழல் தடுப்பு ஆணையத்திடம் வாக்குமூலம் அளிக்குமாறு திரு இஸ்மாயில் சப்ரிக்கு முன்பு பலமுறை அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது. முன்னதாக விசாரணையின்போது ஆணையம் 170 மில்லியன் ரிங்கிட் (53.2 மில்லியன் வெள்ளி) மதிப்பிலான வெளிநாட்டு நாணயங்களில் ரொக்கத்தையும் ஏழு மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்திருந்தது.


