கோலாலம்பூர்: கடந்த ஒரு மாதமாக இடுப்பு எலும்பு முறிவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது, சிறிது காலம் வீட்டில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
“பிப்ரவரி 4, 5ஆம் தேதிகளில், டாக்டர் மகாதீர் வீட்டில் ஓய்வெடுப்பார்,” என்று அவரது உதவியாளர் சூஃபி யூசோஃப் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 6) அன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
‘ஐஜேஎன்’ என்பது மலேசியாவின் தேசிய இதய சிகிச்சை நிலையமாகும்.
டாக்டர் மகாதீரின் முன்னேற்றத்தைக் கண்காணித்து வரும் மருத்துவக் குழு, அவரது குணமடைதல் மற்றும் இயன்மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நிலை அதனை ஏற்றுக்கொள்ளும் விதத்தில் மருத்துவர்கள் திருப்தி அடைந்துள்ளதாகத் திரு சுஃபி கூறினார்.
“டாக்டர் மகாதீர் இப்போதைக்கு வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டாலும், அவர் இன்னும் ஐஜேஎன் மருத்துவக் குழுவால் கண்காணிக்கப்படுகிறார்,” என்று திரு சுஃபி மேலும் கூறினார்.
இப்போதைக்கு உடனடி குடும்ப உறுப்பினர்களைத் தவிர பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவர்கள் டாக்டர் மகாதீருக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜனவரி மாதத் தொடக்கத்தில் டாக்டர் மகாதீர் தமது இல்ல மாடத்திலிருந்து வீட்டுக்குள் செல்லும்போது அவரது இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
டாக்டர் மகாதீர் முன்பு இதய பிரச்சினைகளுக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளானார்.
தொடர்புடைய செய்திகள்
அவர், 1981 முதல் 2003ஆம் ஆண்டு வரை பிரதமராக இருந்தார். மீண்டும் 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டாம் முறையாகப் பிரதமராகப் பணியாற்றினார்.
அவர், தனது இரண்டாவது பதவிக்காலத்தில் 94 வயதை எட்டினார். மேலும் அந்த நேரத்தில் உலகின் மிகவும் வயதான தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராகவும் இருந்தார்.
2025ஆம் ஆண்டு, ஜூலை 10ஆம் தேதி அன்று அவருக்கு 100 வயதானது என்று தி ஸ்டார் செய்தி கூறுகிறது.

