காத்மாண்டு: முன்னாள் ‘ராப்’ இசைக் கலைஞரும் காத்மாண்டு மேயருமான பாலேந்திர ஷா, நேப்பாளப் பிரதமர் பதவியைப் பிடிக்கும் நிலையில் இருக்கிறார்.
நேப்பாளப் பொதுத் தேர்தல் வரும் மார்ச் மாதம் 5ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் பாலென் என்று செல்லமாக அழைக்கப்படும் பாலேந்திர ஷா வெல்லும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேப்பாளத்தில் நம்பகமான கருத்துக் கணிப்புகள் கிடையாது. ஆனால், இவர்தான் பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னிலை வகிக்கிறார் என்று சில அரசியல் கவனிப்பாளர்களும் உள்ளூர் ஊடகத்தினரும் முன்னுரைக்கின்றனர்.
ஒருவேளை திரு ஷா பிரதமர் பதவியைப் பிடித்தால் அது, அரசாங்கத்தை விமர்சிக்கும் ‘ராப்’ கலைஞராக இருந்த ஒருவர், தான் சம்பாதித்த புகழைக் கொண்டு உயரிய அரசியல் பொறுப்பிற்குச் சென்ற வியப்பூட்டும் வளர்ச்சியாக இருக்கும்.
அதோடு, அவ்வாறு நடந்தால் அது நேப்பாளத்தின் அரசியல் நிலவரத்தை மாற்றியமைக்கக்கூடும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே அமைந்திருக்கும், இமயமலைப் பகுதியை மையமாகக் கொண்டுள்ள சிறிய நாடான நேப்பாளத்தில் பல காலமாகச் செயல்பட்டுவரும் குறிப்பிட்ட சில கட்சிகள்தான் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன.
பாலெனின் ராஸ்திரிய ஸ்வதந்திரா கட்சி (ஆர்எஸ்பி), நடுநிலைக் கொள்கைகளைக் கொண்ட புதிய கட்சியாகும்.

