ஜகார்த்தா: இந்தோனீசியாவில் இரண்டு ராணுவ விமானங்கள் பயிற்சியின்போது மலையோரப் பகுதியில் விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
ஆகாயப் படை பேச்சாளர் ஒருவர் அந்தத் தகவலைத் தெரிவித்தார்.
கிழக்கு ஜாவாவில் உள்ள மாலாங் நகரிலிருந்து பயிற்சிக்காகப் புறப்பட்ட இரண்டு ‘எம்பிரேயர் சூப்பர் டுக்கானோ’ விமானங்களுடனான தொடர்பு, அரைமணி நேரத்திற்குப் பிறகு துண்டிக்கப்பட்டது.
“அனைத்து சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன,” என்று பேச்சாளர் அகுங் சசொங்கோ ஜாட்டி, ஏஎஃப்பி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
விமானங்கள் விபத்துக்குள்ளான இடத்தைப் பற்றி பொதுமக்கள் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, இரண்டு விமானிகளும் இரண்டு துணை விமானிகளும் கண்டெடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்தோனீசியாவில் மக்கள்தொகை அதிகம் உள்ள கிழக்கு ஜாவாவில் அமைந்திருக்கும் புரோமோ மலைக்கு அருகில் உள்ள மலையோரப் பகுதியில் அந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாகத் திரு ஜாட்டி தெரிவித்தார்.
சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும், புலன் விசாரணையாளர்கள் மற்ற விமானங்களில் உள்ள தரவுகளையும் விமானப் பதிவுப் பெட்டிகளையும் ஆராய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக இரண்டு விமானங்களும் நல்ல நிலையில் இருந்ததாகத் திரு ஜாட்டி செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தோனீசியா அதன் பல்லாயிரக்கணக்கான தீவுகளை இணைக்க, ஆகாயப் போக்குவரத்தை அதிகமாகச் சார்ந்துள்ளபோதும், அதன் ஆகாயப் பாதுகாப்பு மோசமான நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் அது மூன்று பெரிய அளவிலான வர்த்தக விமான விபத்துகளை எதிர்கொண்டுள்ளது.