சோல்: தென்கொரியாவின் விரிவுப்படுத்தப்பட்ட ‘கெட்போல்’ எனப்படும் கடலோரக் கழிமுகப் பகுதிகளை யுனெஸ்கோவின் உலக மரபுடைமை பட்டியலில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புசான் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ உலக மரபுடைமை அமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இதன் மூலம், 2021ஆம் ஆண்டில் உலக மரபுடைமை பட்டியலில் முதன்முறையாகச் சேர்க்கப்பட்ட நான்கு கழிமுகப் பகுதிகளுடன், தற்போது மேலும் நான்கு புதியக் கடலோரப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
தெற்கு சுங்சியோவ்வில் உள்ள சோசான், தெற்கு ஜோல்லாவில் இருக்கும் கோஹியுங், முவான், யோசு ஆகிய இடங்களில் அமைந்துள்ள கழிமுகங்களே புதிதாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளாகும்.
புவியியல், கடலியல், பருவநிலை சார்ந்த பலதரப்பட்ட கலவையால் உருவாகியுள்ள இந்த கடலோரக் கழிமுகப் பகுதிகள், உலகின் ஆகப் பெரிய, ஆக்கபூர்வமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் ஒன்றாகத் திகழ்கின்றன. இங்கு 2,150க்கும் மேற்பட்ட தாவர, விலங்கின வகைகள் வாழ்கின்றன. அவற்றில் உலகளவில் அழியும் அபாயத்தில் உள்ள 22 உயிரினங்களும் அடங்கும்.
மேலும், 47 கடலின உயிரினங்களுக்கும் ஐந்து அழியும் தருவாயில் உள்ள முதுகெலும்பற்ற கடலின உயிரினங்களுக்கும் இந்தப் பகுதிகள் புகலிடமாக உள்ளன.
ஆண்டுதோறும் இடம்பெயரும் 118 வகைப் பறவைகளுக்கும் இவை இன்றியமையாத வாழ்விடமாக விளங்குகின்றன. அப்பகுதியைச் சுற்றியுள்ள கடலோரச் சமூகத்தினர் தங்களது பாரம்பரிய மீன்பிடி முறைகள் மூலமாகவே தொடர்ந்து பயனடைந்து வருகின்றனர்.

