குவாங் ட்ரி: வியட்னாமில் ரொட்டி சாப்பிட்ட நான்கு வயதுச் சிறுவர் உட்பட பலர் உணவு நச்சுப் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குவாங் ட்ரி மாகாணம், ஹுவாங் ஹோவா மாவட்டத்தில் உள்ள பேக்கரியில் அவர்கள் ரொட்டி வாங்கியுள்ளனர். புதன்கிழமை (ஏப்ரல் 29) காலை முதல் வெள்ளிக்கிழமை (மே 1) காலை வரை 46 பேர் மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 11 முதல் 15 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள். அவர்களுக்கு கடுமையான காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி, சோர்வு, நீரிழப்பு போன்ற அறிகுறிகள் தோன்றின.
தற்போது அனைவரது உடல்நிலையும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுகாதாரக் குழுவினர் சம்பந்தப்பட்ட பேக்கரியில் இருந்து மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள பள்ளிகளில் மற்ற மாணவர்களின் உடல்நிலை குறித்தும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

