நியூயார்க்: பிரான்சும் சவூதி அரேபியாவும் பாலஸ்தீனத் தனிநாடு அமைவதற்கு உலகத் தலைவர்களின் ஆதரவைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அவர்களில் சிலர் அதிகாரபூர்வமாகப் பாலஸ்தீனத்தைத் தனிநாடாக அங்கீகரிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இஸ்ரேலிய, அமெரிக்கத் தரப்புகள் கடும் கண்டனக் குரல்களை எழுப்பக்கூடும் என்றும் கருதப்படுகிறது.
நியூயார்க்கில் உலகத் தலைவர்களின் உச்சநிலை மாநாட்டுக்கு ஃபிரான்ஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இஸ்ரேலும் அமெரிக்காவும் மாநாட்டைப் புறக்கணிக்கும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனத்திற்கான இஸ்ரேலியத் தூதர் டேனி டேனன் குறிப்பிட்டார்.
“மாநாடு எந்த விதத்திலும் உதவாது என்று நாங்கள் கருதுகிறோம். அது பயங்கரவாதத்திற்கு வெகுமதி அளிப்பதாக எண்ணுகிறோம்,” என்று அவர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை (செப்டம்பர் 18) கூறினார்.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் ஒரு பகுதியை இணைத்துக்கொள்வது பற்றி இஸ்ரேல் பரிசீலிப்பதாகக் கூறப்பட்டது. அதே நேரம் பாரிசுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்தும் அது யோசிப்பதாகத் தெரிகிறது.
பிரான்ஸ் உட்பட இஸ்ரேலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் நாடுகள் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று அமெரிக்காவும் எச்சரித்துள்ளது.