ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் உள்ள ஃபாரஸ்ட் சிட்டியின் வீடமைப்புத் திட்டத்தில் இருந்தபடி செயல்பட்ட மோசடிக் கும்பல்கள் பிடிபட்டன.
அதனைத் தொடர்ந்து குற்றச் செயல்களைத் தடுக்கவும் பொதுமக்களின் பாதுகாப்பை வலுப்படுத்தவும் தாங்கள் தொடர்ந்து சட்ட அமலாக்கத் துறையுடன் இணைந்து செயல்படப்போவதாக ஜோகூரில் ஃபாரஸ்ட் சிட்டி அமைப்பின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இஸ்கந்தர் புத்திரியில் நடந்த ஒருங்கிணைந்த சோதனையின்போது தாங்கள் அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு தந்ததாக ஃபாரஸ்ட் சிட்டி புதன்கிழமை (ஜூலை 29) அறிக்கை மூலம் தெரிவித்தது. அச்சோதனையில் 300க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் வெளிநாட்டவர், உள்ளூர்வாசிகள் ஆகியோர் அடங்குவர்.
“காவல்துறை, உள்துறை அமைச்சு, குடிநுழைவுப் பிரிவு உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து துரிதமாக மேற்கொண்ட நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“அந்நடவடிக்கை, சட்டத்தை நிலைநாட்டி, திட்டமிடப்பட்ட குற்றங்களைத் தடுத்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் கடப்பாடு கொண்டுள்ள காட்டுகிறது,” என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட குடியிருப்புப் பகுதியில் காவல்துறை நிரந்தரமாகப் பணியில் ஈடுபட்டு செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்குத் தாங்கள் ஆதரவு தெரிவிப்பதாகவும் ஃபாரஸ்ட் சிட்டி சொன்னது.

