கோலாலம்பூர்: மலேசியாவின் தேசிய சளிக்காய்ச்சல் தடுப்பூசித் திட்டத்தின்கீழ், 60 வயது மற்றும் அதற்கும் அதிக வயதுடைய அனைத்து மலேசியர்களுக்கும் நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள 50 வயது முதல் 59 வயதுடையவர்களுக்கும் இலவச சளிக்காய்ச்சல் தடுப்பூசித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நீரிழிவு, உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, புற்றுநோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டோர் உட்பட இதயம், நுரையீரல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உள்ளோரும் இந்த இலவசத் தடுப்பூசியைப் பெறத் தகுதியுடையவர்கள். இவர்கள் 50 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கடந்த 2025ஆம் ஆண்டில், நாட்பட்ட நோய் உள்ள 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு மட்டுமே இந்த இலவசத் தடுப்பூசித் திட்டம் வரையறுக்கப்பட்டிருந்தது. தற்போது, ஏப்ரல் மாத இறுதியில் இந்தத் தகுதி வரம்புகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, முந்தைய ஆண்டைவிட அதிகப்படியான மக்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தங்களுக்கு அருகில் உள்ள எந்தெந்த அரசாங்கச் சுகாதார மருந்தகங்களில் இந்தத் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம் என்பதை முதியவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும் அதற்கான முன்பதிவை செய்துகொள்ளவும் ‘மைசெஜாத்ரா’ செயலியைப் பயன்படுத்தலாம். முன்பதிவு செய்யாமல் நேரடியாகச் சென்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம். எனினும், அது அங்குள்ள தடுப்பூசிகளின் இருப்பைப் பொறுத்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

