சிட்னி: ஒவ்வோர் ஈஸ்டர் பண்டிகையின்போதும், சிட்னியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பெண்மணி எல்சா உல்சாக், அந்த நான்கு நாள் வார இறுதியில் பயணம் மேற்கொள்ளும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களில் ஒருவர்.
ஆனால் 2026ல், தனது பயணத்திற்குத் தேவைப்படும் பெட்ரோலின் விலையைச் சமாளிக்க முடியாததால், அவர் தனது கணவருடனான பயணத்தை ரத்து செய்துள்ளார்.
“நாங்கள் வழக்கமாக கிராமப்புறங்களுக்குச் செல்வோம். ஆனால் பெட்ரோல் பற்றாக்குறை காரணமாக, இந்த ஆண்டு வீட்டிலேயே இருக்க முடிவு செய்தோம்,” என்று 67 வயதான திருமதி உல்சாக் கூறினார்.
ஒரு நீண்ட பயணம் செலவு மிக்கதாக இருக்கும். மேலும் அதிக தேவையில் இருப்போர் பயன்படுத்தக்கூடிய எரிபொருளையும் அது வீணடிக்கும் என்று அவர் கூறினார்.
“நாங்கள் வழக்கமாக நண்பர்களுடன் குழுவாகச் செல்வோம். ஆனால் அனைவரும் பயணத்தை ரத்து செய்துவிட்டனர்,” என்றும் அவர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் ஈஸ்டர் நீண்ட வாரயிறுதி, பொதுவாக ஆண்டின் மிகவும் பரபரப்பான பயண நேரங்களில் ஒன்றாகும். ராய் மோர்கன் என்ற ஆய்வு நிறுவனத்தின்படி, 2025ஆம் ஆண்டில், இந்தக் காலகட்டத்தில் 45 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயணம் செய்து, தங்கள் பயணங்களுக்காக 11.1 பில்லியன் ஆஸ்திரேலிய டாலரைச் ($9.8 பில்லியன்) செலவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பிப்ரவரி 28ஆம் தேதி அன்று ஈரான் போர் வெடித்ததாலும், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தைத் தடைசெய்துள்ள ஹோர்முஸ் நீரிணை முற்றுகையிடப்பட்டதாலும், 2026ஆம் ஆண்டுக்கான பல திட்டங்கள் சீர்குலைந்துள்ளன.

