கேன்பரா: மத்திய கிழக்கில் நீடித்து வரும் போர் காரணமாக எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், உயர்ந்து வரும் எரிபொருள் விலையின் சுமையைக் குறைக்க ஆஸ்திரேலியாவின் இரண்டு மாநிலங்கள் தற்காலிகமாக இலவசப் பொதுப் போக்குவரத்துச் சேவையை வழங்கவுள்ளன.
விக்டோரியா மாநில அரசாங்கத்தின் மின்னஞ்சல் அறிக்கையின்படி, மார்ச் மாதம் 31ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பொதுப் போக்குவரத்தில் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோல், டாஸ்மேனியா அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் மாதம் 30ஆம் முதல் ஜூலை மாதம் 1ஆம் தேதி வரை பேருந்துகள் மற்றும் படகுகளில் பயணம் செய்ய கட்டணம் ஏதும் கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் எரிபொருள் விநியோக இடர்பாடுகள் அதிகரித்துள்ளன. நூற்றுக்கணக்கான எரிபொருள் நிலையங்களில் தட்டுப்பாடு நிலவுவதோடு, விவசாயம் மற்றும் சுரங்கத் துறைகளிலும் விநியோகத் தடைகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், தற்போதைக்கு எரிபொருள் இருப்பு பாதுகாப்பாக உள்ளதாக ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனீஸ் மக்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் நம்பிக்கையளித்தார்.
அதிகரித்து வரும் எரிபொருள் விலை, அந்நாட்டின் மத்திய வங்கியின் பணவீக்கக் கணிப்புகளையும் சிக்கலாக்கியுள்ளது. மத்திய கிழக்கு போர்ச் சூழலுக்கு முன்னரே விலைவாசி உயர்வு அழுத்தம் நிலவி வந்தது. ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி அதன் அண்மைய கூட்டத்தில் முக்கிய வட்டி விகிதத்தை 4.1 விழுக்காடாக உயர்த்தியது. 2026ஆம் ஆண்டில் மேலும் இரண்டு முறை வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர்.

