வாஷிங்டன்: போரால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் காஸாவின் மறுநிர்மாணத்திற்கு 70 பில்லியன் அமெரிக்க டாலர் (S$91 பில்லியன்) செலவாகும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் கூறியிருக்கிறது. காஸாவை மீண்டும் கட்டியெழுப்பப் பல்லாண்டு ஆகலாம் என்றும் அது தெரிவித்தது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களின் காரணமாக, காஸா அதல பாதாளத்தைப் போன்று காட்சியளிப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவனம் சொன்னது.
வாழ்வதற்குத் தேவையான ஒவ்வொரு தூணையும் இஸ்ரேலின் ராணுவம் இடித்துநொறுக்கிவிட்டதாக ஐநாவின் வர்த்தக, மேம்பாட்டு அமைப்பு அறிக்கையொன்றில் குறிப்பிட்டது. காஸாவின் ஒட்டுமொத்த மக்கள்தொகையும் கடும் வறுமையில் வாடுவதாக அறிக்கை சொன்னது.
2023-2024ல் காஸாவின் பொருளியல் 87 விழுக்காடு சுருங்கியது. தனிமனித வருமானம் 161 அமெரிக்க டாலராக (S$210) இருந்தது. உலக அளவில் அது ஆகக் குறைவு. வன்முறை, குடியேற்ற விரிவாக்கம், ஊழியர் நடமாட்டத்துக்கான கட்டுப்பாடு முதலியவற்றால் பொருளியல் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டதாக அறிக்கை சுட்டியது.
கணிசமான அளவுக்கு நிதியுதவி கிடைத்தாலும் 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பிருந்த நிலைக்குப் பொருளியல் திரும்பப் பல்லாண்டு ஆகலாம் என்று அறிக்கை குறிப்பிட்டது.

