கைப்பேசிகளில் இயங்கும் கூகல் அசிஸ்டென்ட் சேவை செப்டம்பர் 4ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதற்குப் பதிலாக, கூகலின் முதன்மைச் செயற்கை நுண்ணறிவுச் செயலியான ஜெமினை கைப்பேசிகளில் இடம்பெறும். கூகல் அசிஸ்டென்ட் பயனர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்னஞ்சலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் கைப்பேசிகள், கைக்கணினிகள், அவற்றுடன் இணைக்கப்படும் சாதனங்களுக்குப் பொருந்தும்.
‘வேர் ஓஎஸ்’ இயங்குதளத்தில் இயங்கும் கடிகாரங்கள், ஜெமினையுடன் ஒத்துப்போகக்கூடிய ஒலிக்கருவிகள், ‘ஆண்ட்ராய்ட் ஆட்டோ’ கொண்ட வாகனத் தகவல் சாதனங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இருப்பினும், கூகல் அசிஸ்டென்ட் வசதி உள்ளமைக்கப்பட்டுள்ள வாகனங்களில் செப்டம்பர் 4க்குப் பிறகும் இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும். ஒரு சாதனத்திலிருந்து கூகல் அசிஸ்டென்ட் நீக்கப்பட்ட பிறகு, பயனர்கள் மீண்டும் அதற்கு மாற முடியாது. இந்த மாற்றத்திற்குப் பிறகும், பயனர்கள் வழக்கம்போல ‘ஹே கூகல்’ என்று கூறியோ அல்லது ‘பவர்’ பொத்தானை அழுத்தியோ ஜெமினையை இயக்க முடியும். கூகல் டிவி, கூகல் ஹோம் ஒலிபெருக்கிகள், திரைக்கருவிகளுக்கு ஜெமினை சேவையை விரிவுபடுத்த தனியாகத் திட்டமிட்டுள்ளதாகக் கூகல் நிறுவனம் அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளது.


