நேப்பிடோ: லாவோசில் திங்கட்கிழமை நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் கூட்டத்தில் மியன்மார் வெளியுறவு அமைச்சின் நிரந்தர செயலாளரான மர்லர் தான் ஹித்தே கலந்துகொண்டார்.
இத்தகவலை இந்தோனீசிய வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மர்சுடி ராய்ட்டர்சிடம் தெரிவித்தார்.
உள்நாட்டுக் கலவரங்களால் பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் இந்த நடவடிக்கை அந்நாடு ஆசியான் கொள்கைக்கு இணங்குவதாக உள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
2021ஆம் ஆண்டு மியன்மாரில் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்ததன் பிறகு, அந்நாட்டில் தொடர்ந்து வன்செயல்கள் இடம்பெற்றன. ராணுவம் அத்தகைய வன்செயல்களை நிறுத்த வேண்டும் என்றும் அமைதி உடன்படிக்கையின் ஐந்து அம்சங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஆசியான் வலியுறுத்தி வந்துள்ளது. ஆனால் அது பலிக்கவில்லை.
இதனால், ஆசியான் அமைப்பு, மியன்மார் ராணுவ ஜெனரல்கள் உயர்நிலை ஆசியான் கூட்டங்களில் கலந்துகொள்ளத் தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ராணுவ ஆட்சியாளர்களுடன் அது உறவைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆசியான் கூட்டத்திற்கும் “அரசியலில் இல்லாத பிரதிநிதி” என்ற அடிப்படையில் மியன்மாருக்கு அழைப்பு அனுப்புவதை அவ்வமைப்புக் கொள்கையாக கொண்டுள்ளது.
ஆனால், ஆசியான் அமைப்பைச் சேர்ந்த நாடுகள் தங்கள் நாட்டு உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் என்று எண்ணிய மியன்மாரை ஆளும் ராணுவ ஆட்சிக் குழு அவ்வழைப்பைக் கடந்த இரண்டு ஆண்டுகளாக நிராகரித்து வந்தது.