பெர்லின்: ஜெர்மனியின் அமைச்சரவை, அந்நாட்டு உளவுத் துறைக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கும் மசோதாவுக்கு புதன்கிழமை (ஆகஸ்ட் 12) ஒப்புதல் வழங்கியுள்ளது.
புதிய அதிகாரங்களின்படி வெளிநாட்டு எதிரிகளின் தகவல் தொடர்புகளை ஊடுருவல் செய்யவும், தடுக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஏனெனில் இணையத்திலும் பலவித வடிவங்களிலும் ஜெர்மனிக்கு அச்சுறுத்தல் அதிகரித்து வருவதால் அவற்றை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பல மாதங்களாக விவாதிக்கப்பட்ட அந்த தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் ஜெர்மனியின் பிஎன்டி எனப்படும் வெளிநாட்டு உளவு அமைப்பு, பிஎஃப்வி எனப்படும் உள்ளூர் உளவுத் துறை ஆகிய இரு அமைப்புகளுக்கும் விரிவான அதிகாரத்தை அளிக்கும்.
அதன்படி மின்னிலக்கத் தகவல் தொடர்புத் தளங்களைப் பயன்படுத்திக் கண்காணிப்பது, தரவுகளைச் சேகரிப்பது, தாக்குதல்களை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற பலவற்றைச் செய்யமுடியும்.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகளுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ள செயல்பாடுகள் ஜெர்மனியின் உளவுத்துறைக் கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் அலெக்சான்டர் டொபிரின்ட் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜெர்மனியின் உளவுத் துறை புதிய செயல்பாட்டு அதிகாரத்துடன் இனி சுதந்திரமாக செயல்படும் வகையில் முழுமையான உருமாற்றம் செய்யப்படுகிறது என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டார்.


