கனடாவின் கியூபெக் பகுதியில் எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்க உலக நாடுகள் உதவிக்கரம் நீட்டியுள்ளன.
காட்டுத் தீயால் வட அமெரிக்காவின் கிழக்குப் பகுதி புகைமூட்டத்தால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலையாலும் மின்னல் தாக்குதல்களாலும் காடுகளில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகக் காட்டுத்தீ மோசமாகியுள்ளது.
உள்ளூர் தீயணைப்பு வீரர்களால் நிலைமையைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. அதனால் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் கனடா வந்துள்ளனர்.
இதுவரை 130 தீயணைப்பு வீரர்கள் கியூபெக் வட்டாரத்திற்கு வந்துள்ளதாக கனடிய அதிகாரிகள் கூறினர்.
பிரான்சில் இருந்து மட்டும் 110 தீயணைப்பு வீரர்கள் வரவுள்ளனர். தென்னாப்பிரிக்காவில் இருந்தும் 100க்கும் அதிகமானவர்கள் கனடா சென்றுள்ளனர்.
அதிக அளவில் தீயணைப்பு வீரர்கள் இருந்தால் நிலைமையை விரைவில் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று கனடா தெரிவித்தது.
கியூபெக் வரலாற்றில் ஆக மோசமான காட்டுத்தீயாக இது பார்க்கப்படுகிறது. இதுவரை 280,000 ஹெக்டர் நிலபரப்பு காட்டுத்தீயால் எரிந்துள்ளது.