மாபெரும் கட்டடத்துக்கான பணிகளை நிறுத்திய கூகல்

1 mins read
130d2e3d-cba0-43e2-a042-1bc1c8d8cfc4
படம்: ஏஎஃப்பி -

சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஹோசே நகரில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான 'சிலிக்கான் வேலி' வட்டாரத்தில் தனது மாபெரும் கட்டடத்துக்கான பணிகளை கூகல் நிறுத்தியுள்ளது. அல்ஃபாபெட் நிறுவனத்துக்குச் சொந்தமான கூகல் அண்மைக் காலமாக செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வேளையில் புதிய கட்டடத்துக்கானப் பணிகள் நிறுத்தகப்பட்டிருப்பதாக சிஎன்பிசி செய்தி நிறுவனம் தெரிவித்தது.

கட்டுமானப் பணிகளை இவ்வாண்டு இறுதியில் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. அலுவலகங்கள், வீடுகள், பூங்காக்கள் ஆகியவை புதிய கட்டடத்திலும் அதன் வளாகத்திலும் இடம்பெறவிருந்ததாக சிஎன்பிசி குறிப்பிட்டது.

உலகளவில் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் சுமார் 12,000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யப்போவதாக அல்ஃபாபெட் இவ்வாண்டு தொடக்கத்தில் அறிவித்திருந்தது. பொருளியல் ரீதியான சவால்களால் ஆட்குறைப்பு செய்யவேண்டிய சூழல் எழுந்ததாக அல்ஃபாபெட் கூறியது.

சென்ற ஆண்டின் கடைசி காலாண்டில் அந்நிறுவனத்தின் வருமானமும் லாபமும் எதிர்பார்த்ததைவிடக் குறைவாகப் பதிவாயின.

உலகின் பல பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளன. பொருளியல் மந்தமடைவதற்கான வாய்ப்புகள் இருப்பதை எதிர்பார்க்காமல் அவற்றில் பல அளவுக்கதிகமாகச் செலவு செய்ததாக கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.