நியூயார்க்: கூகல் நிறுவனம், அதன் ஜெமினை ஏஐயைப் பயன்படுத்த மெட்டாவுக்குக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
மெட்டா நிறுவனம் தனது செயற்கை நுண்ணறிவு திட்டங்களுக்காக கூடுதல் கணினி ஆற்றலுடைய உள்கட்டமைப்புத் திறன் தேவை எனக் கூறியது.
ஆனால் கூகுல் நிறுவனத்தால் இதனை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தனது ‘ஜெமினை ஏஐ’மாதிரிகளை மெட்டா நிறுவனம் பயன்படுத்துவதற்குக் கூகல் கட்டுப்பாடுகளை விதித்தது.
கூகுல் உரிமையாளரான ஆல்பாபெட், கடந்த மார்ச் மாதம் மெட்டாவிடம் இந்த விவரத்தைத் தெரிவித்தது.
மெட்டா விலைக்கு வாங்க விரும்பிய முழுமையான ‘ஜெமினை ஏஐ’ கணினித் திறனைத் தங்களால் வழங்க முடியாது என்று கூகல் கூறியதாக அந்த நாளேடு கூறியது.
இந்தத் தட்டுப்பாடு காரணமாக மெட்டாவின் சில ஏஐ திட்டங்கள் பாதிக்கப்பட்டு தாமதமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மற்ற சில வாடிக்கையாளர்களும் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், கூகலின் ஏஐ மாதிரிகளுக்கு மெட்டாவிடம் இருந்து மிக அதிக அளவிலான தேவை இருந்ததால், அந்நிறுவனமே இதனால் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளதாக ஃபினான்ஷியல் டைம்ஸ் குறிப்பிட்டது.
இவ்விவகாரம் குறித்து கூகல், மெட்டா நிறுவனங்கள் உடனடியாக எவ்விதக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அதே வேளையில், இந்தத் தகவலைத் தங்களால் உடனடியாகத் தனிப்பட்ட முறையில் உறுதிப்படுத்த முடியவில்லை என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
உலக அளவில் தொழில்நுட்ப நிறுவனங்கள், கணினி சில்லுகளுக்காவும் தரவு மையங்களுக்காகவும் பில்லியன் கணக்கில் முதலீடு செய்து வந்தாலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஏஐ சேவைகளுக்கான கணினித் திறனை முழுமையாகப் பூர்த்தி செய்யப் போராடி வருகின்றன.
கடந்த மார்ச் மாதத்துடன் முடிந்த முதல் காலாண்டில் கூகல் கிளவுட் பிரிவின் வருவாய் 20 பில்லியன் அமெரிக்க டாலராக (S$ 25.8 பில்லியன்) உயர்ந்தது.
இருப்பினும், கணினித் திறன் பற்றாக்குறை காரணமாக இதைவிடக் கூடுதல் வளர்ச்சியை எட்ட முடியாமல் போனதாக கூகல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்திருந்தார்.

