புத்ராஜெயா: மலேசியத் தீபகற்பத்தின் வடக்கு எல்லைப் பகுதியில் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 100 மில்லியன் ரிங்கிட் (S$29 [Ϟ]மில்லியன்) ஒதுக்க அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டிய குற்றச்[Ϟ]செயல்களைத் தடுக்கும் நோக்கிலும் மலேசியாவின் வடபகுதியிலும் தாய்லாந்தின் தென்பகுதியிலும் பொருளியலை மேம்படுத்த இரு நாடுகளும் கொண்டுள்ள கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த நிதி ஒதுக்கீடு இடம்பெறுவதாகப் பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, கெடா, கிளந்தான், பெர்லிஸ் மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தாய்லாந்துப் பிரதமர் ஸ்ரேத்தா ஹவிசினைத் தாம் சந்திக்கவுள்ளதாகவும் அப்போது இரு நாடுகளின் தேசியப் பாதுகாப்பு, பொருளியல் மேம்பாடு குறித்து அவருடன் பேசவுள்ளதாகவும் திரு அன்வார் தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 30) இடம்பெற்ற தேசியப் பாதுகாப்பு மாதத் தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இவ்விவரங்களை வெளியிட்டார்.
மேலும், பாதுகாப்பு மேம்பாட்டிற்கான அரசாங்க நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
இருப்பினும், பாதுகாப்பு சார்ந்த கொள்முதல்கள் நேர்மையுடனும் செலவுச் சிக்கனமாகவும் இடம்பெறுவதை உறுதிசெய்ய, அவை மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இவ்வாண்டிற்கான உலக அமைதிக் குறியீட்டுப் பட்டியலில் மலேசியா ஒன்பது இடங்கள் முன்னேறி, பாதுகாப்புமிக்க பத்து நாடுகளுக்குள் ஒன்றாக வந்துள்ளதையும் திரு அன்வார் சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், 2023 தேசியப் பாதுகாப்புக் குறியீட்டில் 1.48 புள்ளி பெற்றுள்ளதை ‘குறிப்பிடத்தக்க சாதனை’ என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, இந்தோனீசியா புதிய தலைநகரை அமைத்து வருவதையடுத்து, சரவாக் - கலிமந்ந்தான் எல்லையில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்த இவ்வாண்டு ஜனவரியில் மலேசிய அரசாங்கம் ஒரு பில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்திருந்தது நினைவுகூரத்தக்கது.