கோலாலம்பூர்: மலேசியாவின் வேலையின்மை விகிதம் சென்ற ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து ஐந்து மாதங்களுக்கு 2.9 விழுக்காடாக இருந்தது.
அந்த விகிதம், 11 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவானதாகும். பிறகு கடந்த ஏப்ரல் மாதம் அவ்விகிதம் மூன்று விழுக்காட்டுக்கு அதிகரித்தது.
கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகள் அல்ல
ஆரசாங்கத்தின் புள்ளிவிவரங்களில் இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. எனினும், பலர் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகளில் இல்லை என்றும் இந்தப் புள்ளிவிவரங்கள் அப்பிரச்சினையை மறைக்கின்றன என்றும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய பொருளியல் வல்லுநர்கள் கூறினர்.
கடந்த 2024ஆம் ஆண்டில் மலேசியாவில் கிட்டத்தட்ட 2.06 மில்லியன் மக்கள் தங்களின் வேலைத் திறன்களுக்கு ஏற்ற வேலைகளில் இல்லை. அந்த எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் வேலையில் இருக்கும், மேல்நிலைக் கல்வி பயின்றவர்களில் 36 விழுக்காட்டினர் பாதிக்கப்பட்டதாக 2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் ஊழியரணிப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் வேலையில் உள்ள பட்டதாரிகள், குறிப்பிட்ட வேலைத் திறன்களைக் கொண்டவர்கள் ஆகியோர் அடங்குவர்.
அத்தகையோர் தங்களின் கல்விக்கோ ஆற்றலுக்கோ தாங்கள் பெற்ற பயிற்சிகளுக்கோ முழுமையாக ஏற்ற வேலைகளில் இல்லை.
வெளிப்படையாகத் தெரியவந்த பிரச்சினை
கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி இந்தப் பிரச்சினை வெளிப்படையாகத் தெரிந்தது. மலாக்கா மாநிலத்தில் உள்ள ஹாலிடே இன் ஹோட்டலில் ஜெர்மனியின் இன்ஃபினியோன் டெக்னாலஜீஸ் நடத்திய வேலை நேர்காணலில் கலந்துகொள்வதற்குக் கிட்டத்தட்ட 1,000 பேர் 2 கிலோமீட்டர் வரை நீளம்கொண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்நிகழ்வு பதிவான காணொளிகள் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்பட்டு அதிகம் பகிரப்பட்டன.
இன்ஃபினியோன் டெக்னாலஜீஸ் உற்பத்தி செயல்பாட்டுப் பணியாளர்கள் உள்ளிட்டோரை வேலைக்கு எடுத்தது. ஆரம்பச் சம்பளம் 3,500 ரிங்கிட் (S$1,108) எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மலேசியாவில் வர்த்தகம், சமூக அறிவியல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து அதிக அளவில் பட்டதாரிகள் உருவெடுத்துவருவதாக சில வல்லுநர்கள் கூறுகின்றனர். அதேவேளை பொறியியல், மென்பொருள் மேம்பாடு உள்ளிட்டவற்றில் அந்நாட்டில் போதுமான திறனாளர்கள் இல்லை.

