இஸ்லாமாபாத்: மேற்குப் பாகிஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) சுங்கத்துறை அதிகாரிகள் இருவரை அடையாளம் தெரியாத பேர்வழிகள் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.
முன்னதாக, அதே பகுதியில் கடந்த வியாழக்கிழமையன்று சுங்கத்துறை அதிகாரிகள் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்விரு தாக்குதல்களுக்கும் இதுவரை எந்த ஓர் அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
அண்மைய ஆண்டுகளாக, ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாகிஸ்தான் பகுதிகளில் பாதுகாப்பு மோசமடைந்து வருகிறது. பெரும்பாலும் காவல்துறையையும் பாதுகாப்புப் படையையும் குறிவைத்து, தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. அவற்றில் சில தாக்குதல்களுக்கு பாகிஸ்தானிய தலிபான் (டிடிபி) அமைப்பு பொறுப்பேற்றது.
“பரபரப்பான நெடுஞ்சாலையில் சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொள்வதற்காகச் சென்றிருந்தபோது அடையாளம் தெரியாத சிலர் அவர்களைச் சுட்டுக்கொன்றுவிட்டனர்,” என்று மாவட்டக் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் முகம்மது அட்னன் கூறினார்.
இத்தாக்குதலில் மேலும் இருவர் காயமடைந்தனர்.
இதனிடையே, இத்தகைய தாக்குதல்களை மேற்கொள்ள போராளிகள் ஆப்கானிஸ்தானைத் தளமாகப் பயன்படுத்திக்கொள்வதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால், அதனை மறுத்துள்ள ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் பாதுகாப்புப் பிரச்சினைகள் அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் தெரிவித்துள்ளது.