ஐக்கிய அரபு சிற்றரசில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான துபாயின் சில பகுதிகளைச் சனிக்கிழமை அடர்த்தியான புழுதிப்புயலும் கடுமையான கோடை மழையும் ஆலங்கட்டி மழையும் தாக்கியது.
துபாயின் அல் மர்மும் பகுதியில் பலத்த காற்றுடன் மழைப் பொழிவதையும் சாலையோரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதையும் துபாய் வானிலை ஆராய்ச்சி மையம் பகிர்ந்த காணொளியில் காணமுடிந்தது.
துபாய் நகராட்சிக்கு சனிக்கிழமை 100க்கும் மேற்பட்ட அவசர உதவி அழைப்புகள் வந்ததாகக் கூறப்படுகிறது. அந்த அழைப்புகளில் மரங்கள் முறிந்து விழுந்திருப்பதாகவும் மழைநீர் குளம்போல் தேங்கி இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
அங்கு நிலவும் மோசமான வானிலையால் பொதுமக்கள் பாதுகாப்புக் கருதி பூங்காக்களைத் தற்காலிகமாக மூடுவதாக ஞாயிற்றுக்கிழமை துபாய் நகராட்சி அறிவித்தது.
இதற்கிடையே பொதுமக்கள் தங்கள் பகுதியில் வீசிய புயலின் சீற்றத்தைக் காணொளியாகவும் படங்களாகவும் எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்தனர்.
பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவதையும் புயலின் சீற்றத்தையும் அந்தக் காணொளிகளில் காண முடிந்தது.
சிற்றரசின் கிழக்குப் பகுதிகளில் திங்கள்கிழமை வரை மழை பெய்யும் எனச் சிற்றரசின் தேசிய வானிலை ஆய்வு மையம் கூறியது.
மேலும், புயல் மணிக்கு 10 கி.மீ. முதல் 25 கி.மீ. வரை வீசக்கூடும் என்றும் அவ்வப்போது மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதாக ‘அரேபியன் பிஸினஸ்’ நாளிதழ் தெரிவித்தது.
அடுத்த வாரம் முழுவதும் ஈரமான வானிலை நிலவும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், அடுத்த வாரத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியசுக்கு மேல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.