கோலாலம்பூர்: மத்திய கிழக்கில் அமைதி மெதுமெதுவாகத் திரும்பினாலும் அந்த வட்டாரத்தில் பதற்றம் தொடர்கிறது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுவருவதால் ஹஜ்ஜுப் பயண ஏற்பாடு குறித்து மலேசியாவும் இந்தோனீசியாவும் கருத்து தெரிவித்துள்ளன.
இவ்வாண்டுக்கான ஹஜ் யாத்திரை மே 24ஆம் தேதி முதல் மே 29ஆம் தேதி வரை நடக்கிறது. இந்தோனீசியாவிலிருந்து மட்டும் 221,000 பேர் சவூதி அரேபியாவுக்குப் புனித யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர். அதேபோல் மலேசியாவிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரை மேற்கொள்கின்றனர்.
“மத்திய கிழக்கு நிலவரத்தால் தங்களது ஹஜ்ஜுப் பயணம் பாதிக்கப்படுமா? பாதுகாப்பாகச் சென்று வர முடியுமா? என்று மக்கள் கவலையுடன் உள்ளனர்,” என்று மலேசியாவின் பிரதமர் அலுவலக அமைச்சர் ஸுல்கிஃபிலி ஹசான் தெரிவித்தார்.
“ஹஜ்ஜுப் பயணம் குறித்து பலதரப்பு அமைச்சுகளுடன் பேசியுள்ளோம், மக்கள் பதற்றப்பட வேண்டாம். நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறோம். போலியான தகவல்களை நம்ப வேண்டாம்,” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே, இந்தோனீசியா ஏப்ரல் 22ஆம் தேதி தனது முதல் ஹஜ்ஜூப் பயணக் குழுவை சவூதி அரேபியாவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அதற்கான அனைத்துப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் அது செய்துவருகிறது.
மே 7ஆம் தேதி இரண்டாவது குழுவை இந்தோனீசியா அனுப்பத் திட்டமிட்டுள்ளது.

