காஸா: பாலஸ்தீனப் போராளிக் குழுவான ஹமாஸ், அண்டை நாடுகளைக் குறிவைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எதிராகத் தன்னைத் தற்காத்துக்கொள்ளும் உரிமை டெஹ்ரானுக்கு உண்டு என்று ஹமாஸ் கூறியது.
“அனைத்துலகச் சட்டங்களுக்கு இணங்கி, தன்னிடம் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி அந்த ஆக்கிரமிப்பிற்குப் பதிலடி கொடுப்பதற்கான ஈரானின் உரிமையை உறுதிப்படுத்தும் அதே வேளையில், அண்டை நாடுகளைக் குறிவைப்பதைத் தவிர்க்குமாறு ஈரானில் உள்ள சகோதரர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்று ஹமாஸ் அறிக்கை ஒன்றில் கூறியது.
காஸாவில் இஸ்ரேலுடன் இரண்டு ஆண்டுகளாகக் கடும் போரை நடத்திவரும் ஹமாஸ், தற்போது நடக்கும் ஈரான் போரை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்துலகச் சமூகத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, பிப்ரவரி 28ஆம் தேதி, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லாஅலி காமெனி கொல்லப்பட்டதை ஒரு கொடூரமான குற்றம் என்று ஹமாஸ் கண்டித்திருந்தது.
பாலஸ்தீன இயக்கத்திற்கு அவர் நீண்டகாலமாக அளித்துவந்த ஆதரவையும் அது வெளிப்படையாக அங்கீகரித்தது.
காமெனி கொல்லப்பட்ட சிறிது நேரத்திற்குள்ளாக வெளியிட்ட அறிக்கையில், “அவர் எங்களது மக்களுக்கும் லட்சியத்திற்கும் போராட்டத்திற்கும் அனைத்துவிதமான அரசியல், அரசதந்திர, ராணுவ ஆதரவை வழங்கினார்,” என்று ஹமாஸ் குறிப்பிட்டிருந்தது.

