கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தொடர்பான வீட்டுக்காவல் உத்தரவு எதிலும் தான் கையெழுத்திடவில்லை என்று பிரதமர் அலுவலக (கூட்டுறவுப் பிரதேசங்கள்) அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த உத்தரவு குறித்த தகவலை அவர் மறுத்துள்ளார்.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) காலை தனது ‘எக்ஸ்’ சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் ஹன்னா இதனைத் தெரிவித்தார்.
“அந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது போல, வீட்டுக்காவல் உத்தரவு எதிலும் நான் ஒருபோதும் கையெழுத்திடவில்லை. அந்த ஆவணம் வெளியானபோது, மன்னிப்பு வாரியம் இன்னும் கூடவில்லை. தயவுசெய்து இந்தப் போலியான தகவலைப் பரப்ப வேண்டாம். எனது ஊடகச் செயலாளர் இது குறித்து அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே பதிவில், இவ்விவகாரம் தொடர்பாக மலேசியத் தகவல் தொடர்பு, பல்லூடக ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை உறுதிப்படுத்தும் வகையிலான ஒரு திரைச்சுடுவை (screenshot) இயோ பகிர்ந்துகொண்டார்.
முன்னதாக, நஜிப் தொடர்பான வீட்டுக்காவல் உத்தரவு என்று கூறப்படும், ஹன்னாவின் கையொப்பம் அடங்கிய ஆவணம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.
கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களுக்கான மன்னிப்பு வாரியத்தின் 64வது கூட்டம் தொடர்பான நிகழ்வுகளைச் செய்தியாளர்கள் தொடர்ந்து கவனித்து வருவதால், செப்டம்பர் 18ஆம் தேதி காலையில் இருந்தே தேசிய அரண்மனை நிகழ்வுகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.
